அடுத்த வாரம் 7-ந்தேதியும், 12-ந்தேதியும் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவ காலங்களில் மட்டுமே போதுமானளவு மழையை பெறமுடியும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தென் மேற்கு பருவ மழை பெய்யும். ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் தான் போதிய மழை கிடைக்கும். தென் மேற்கு பருவ மழை நிறைவு பெற்றதும் இந்தவார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தை குறிப்பாக சென்னையை 2 புயல்கள் தாக்கும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு (2016) போதிய அளவு பெய்யவில்லை. இயல்பை விட 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவியது.
தமிழ்நாடு மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2-வது இடத்தில் இருந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. தென் மேற்கு பருவ மழை தொடங்கியதால் நிலைமை சமாளிக்கப்பட்டது. இந்த மாத இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்குகிறது. வருகிற 7-ந்தேதியும், 12-ந்தேதியும் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.
முதலாவது புயல் 11-ந் தேதி வாக்கிலும், 2-வது புயல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வாக்கிலும் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும்.
இரு புயல்களும் கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும். அப்போது பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்பதால் அதிக அளவு சேதம் இருக்கும்.
இந்த புயல்களால் வட கிழக்கு பருவ மழை காலத்தில் 111 சதவீத அளவுக்கு இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும்.
மேலும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கோடியக்கரைக்கும், கடலூருக்கும் இடையே பலவீனம் அடையும் வாய்ப்பு உள்ளது.
இந்த புயல்கள் காரணமாக வடகிழக்கு பருவ மழை வருகிற 26-ந்தேதி தொடங்கும். வழக்கமான அளவுக்கு மழை பெய்யும். மத்திய மற்றும் தென் தமிழ் நாட்டிலும் கூடுதலாக மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2015-ல் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவு பெய்ததால் சென்னை பலத்த சேதங்களுக்கு உள்ளானதாலும் ,இந்த முறையும் வானிலை ஆய்வு மையம் அதிகளவு மழை பெய்யுமென தெரிவித்துள்ளதாலும் சென்னை இந்த இரண்டு புயல்களுக்கு தாங்குமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.