‘கோச்சடையான்’ ₹5 கோடி காசோலை வழக்கு! குற்றம் உறுதி, ₹2.52 கோடி அபராதம்!! – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

தமிழ் திரைப்படமான கோச்சடையான் தொடர்பான ₹5 கோடி காசோலை பவுன்ஸ் வழக்கில், மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சிறைத்தண்டனையை தளர்த்தி, ₹2.52 கோடி அபராதம் விதித்து முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் பிந்தைய பணிகளுக்கான நிதி பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து இந்த வழக்கு தோன்றியது. அந்தப்படத்தை மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. அதற்கான பணப் பரிவர்த்தனையில், அட் ப்யூரோ அட்வர்டைசிங் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ₹5 கோடி மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

இந்த காசோலை வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டபோது ‘ஸ்டாப் பேமெண்ட்’ காரணமாக காசோலை பவுன்ஸ் ஆனதால், பாதிக்கப்பட்ட நிறுவனம் Negotiable Instruments Act பிரிவு 138ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, 2021 டிசம்பரில் சென்னை பெருநகர நடுவர் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்து, ₹7.70 கோடி (காசோலை தொகை மற்றும் வட்டி சேர்த்து) செலுத்த உத்தரவிட்டது. மேலும், நிறுவன இயக்குநர் டாக்டர். முரளி மனோகர் அவர்களுக்கு ஆறு மாத எளிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட தரப்பு மேல்முறையீடு செய்தது. ஆனால் 2023 ஆகஸ்டில், செஷன்ஸ் நீதிமன்றம், சென்னை பெருநகர நடுவர் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக உறுதிப்படுத்தியது.

பணம் செலுத்தப்படாததால், வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தை சென்றடைந்தது. அனைத்து தரப்புகளின் வாதங்களையும் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதுடன், முன்பே விதிக்கப்பட்ட ₹7.70 கோடி தொகையை செலுத்த வேண்டிய பொறுப்பும் தொடரும் என தெரிவித்தது.

ஆனால், காசோலை பவுன்ஸ் வழக்குகள் பெரும்பாலும் பணத்தை மீட்டெடுப்பதே முக்கிய நோக்கம் என்பதால், சிறைத்தண்டனையை தளர்த்தி, அதற்குப் பதிலாக ₹2.52 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் ஆறு மாத எளிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் சென்னை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த உத்தரவு, கோச்சடையான் திரைப்படத்தைச் சுற்றியிருந்த நீண்டகால நிதி சர்ச்சையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும், காசோலை பவுன்ஸ் சம்பவங்களில் சட்டத்தின் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் நினைவூட்டுகிறது.

Leave a Response