நீட் தேர்வு எதிர்ப்பு; கோவில் கோபுரத்தில் ஏறிய மாணவர்கள்!

Srivilliputhur,TamilNadu376
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

நீட் தேர்வு முறையால் தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததை அடுத்து அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தமிழக முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் கோபுரத்தின் முன்பகுதியில் சில மாணவர்கள் ஏறி நின்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சில போலீஸார் கோபுரத்தின் மேல் ஏற முயற்சி செய்தபோது, மாணவர்கள் நீங்கள் மேலே ஏறினால் நாங்கள் கீழே குதித்துவிடுவோம் என்று மாணவர்கள் கூறியதால் அவர்கள் மேலே ஏறவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response