மதுரை விமானநிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கோசமிட்டபோது, போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் காயமடைந்தார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் சிறிது நேர இடைவெளியில்
வெளியே வருகை தந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள் முதலில் வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர்.
அத்துடன் பன்னீர்செல்வத்தை முற்றுகையிடவும் முயற்சித்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவாகியது. அந்த சமயத்தில் பன்னீர்செல்வத்தை நோக்கி முழக்கத்தை எழுப்பிய படி வந்த மதுரையை சேர்ந்த முள்ளிப்பள்ளம் சக்தி என்பவரை காவல்துறையினர் தடுக்கும்போது காயமடைந்ததால், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அங்கிருந்து பாதுகாப்புடன் சென்றனர். பின்னர் வந்த டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களின் வாழ்த்து முழக்கங்களுடன் அங்கிருந்து சென்றார்.