கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (வயது 56). இவருடைய மனைவி பாப்பம்மா (வயது 45). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் இரு மகன்கள் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர். இரு பெண்களில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில், வெங்கட்டப்பா மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எவ்வித வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளார். குலத் தொழிலான ஆடு மேய்த்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தார் பாப்பம்மா.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பாப்பம்மா வீடு திரும்பவில்லை. ஆடுகள் மட்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளது, சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாப்பம்மாவை தேடி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர், முதல் நாள் தேடிய போது கிடைக்கவில்லை , மாலை நேரம் ஆகிவிட்டதால் வனப் பகுதியில் யானை நடமாட்ட காரணமாக கிராம மக்கள் வீடு திரும்பினர், பின்னர் நேற்று மீண்டும் தேடிச் சென்றனர், அப்போது வனப் பகுதியில் இறந்த நிலையில் அரை நிர்வாணமாக காணப்பட்டார். மேலும் காது மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக தெரிகிறது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்