300 கோடி மோசடி வழக்கு! திரைப்பட தயாரிப்பாளரின் விளக்கம்!!

சில திணங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தை சேர்ந்த நீதிமணி, ஆனந்த் மற்றும் நீதிமணியின் மனைவி ஆகியோர் சில நூறு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ராமநாதபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நீதிமணியின் வாக்குமூலம் காரணமாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் ‘7ஜி’ சிவா, ‘ராக்போர்ட்’ முருகானந்தம் ஆகியோரை காவல் துறை விசாரணைக்கு வரும்படி உத்திரவிடப்பட்டுள்ளனர். இது சம்மந்தமனா செய்திகள் வெளியானபோது, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமுக வலைதளத்தில் ‘300 கோடி ரூபாய் மோசடி’ என செய்திகள் வெளியிடப்பட்டு அதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகைப்படத்தையும் பதிவிட்டு செய்தியாக வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி சம்மந்தமாக தன்னுடைய விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா அறிக்கையில் கூறியிருப்பதாவது பின் வருமாறு, “கொரானா வைரஸ் தாக்கத்தால் பொது மக்களும், திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இன்றைய நிலையில்; சில தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகைகள், மற்றும் சமூக வலைத் தளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த செய்திகளில் எள் முனையளவும் உண்மையில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தமிழ்த் திரையுலகிற்கு; தேசிய விருது உட்பட பல விருதுகளையும், பல திறமையான நடிகர்களையும், படைப்பாளிகளையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தந்துள்ள எனது ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘மகாமுனி’ திரைப்படம் 2019 – ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 – ம் தேதி ரிலீஸ் ஆனது.

திரு.நீதிமணி என்பவர் 2019-மே மாதம் என்னை அணுகி ‘மகாமுனி’ திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று கோரினார். அவ்வகையில் 2019-மே 27ம் தேதி, ரூ.6,25,00,000 (ஆறு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாய்) தொகைக்கு நீதிமணி அவர்களின் ‘Tarun Pictures’ நிறுவனத்திற்கு மகாமுனி திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது, நீதிமணி அவர்கள் பகுதி தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது இலட்சம்) மட்டுமே செலுத்தினார். மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன்னுற்று ஐந்து இலட்சம்) தொகையை பிறகு தருவதாக சொன்னவர். இன்றுவரை தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். மீதமுள்ள தொகையை தரவேண்டி நீதிமணி அவர்கள் மீது சினிமா துறையின் சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரு.நீதிமணியும் அவரின் கூட்டாளிகளும் ரூ.3,00,00,000 (மூன்று கோழி மோசடி செய்துவிட்டதாக திரு.துளசி மணிகண்டன் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். என் மீதோ, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீதோ; எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம் செய்யும் போது அதை வாங்கும் நபர் என்ன செய்கிறார். அவரின் பின்னணி என்ன; என்பதை நாம் ஆராயச்சி செய்வதில்லை. சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே பேசமுடியும். அவ்வகையில் ‘மகாமுனி’ திரைப்படத்தை சட்டப்படியாக; முறையாக விற்பனை செய்ததைத் தவிர எனக்கும் நீதிமணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

திரு.நீதிமணி அவர்கள் மீது திரு.துளசி மணிகண்டன் அவர்கள் அளித்துள்ள புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் என்னையும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தையும் இணைத்து, என் புகைப்படத்தையும் பயன்படுத்தி நான் நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ‘300-கோடி ரூபாய் மோசடி’ உண்மைக்கு புறம்பான, மிகவும் தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல்; தன்னிச்சையாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகளைப் பார்த்து நானும், என் குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம்.

இது போன்ற செய்திகள் திரைத்துரையில் நாம் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயருக்கு ஊறு விளைப்பதோடு எமது எதிர்கால வியாபாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. எனவே, இதுபோன்ற செய்திகளை என் அனுமதி பெறாமலும், உண்மைக்குப் புறம்பாகவும் யாரும் வெளியிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும்; இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் அந்த செய்தியை வெளியிடுவோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்வதோடு மான நஷ்டஈடு வழக்கும் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.

Leave a Response