முதல்வர் வெளியிட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்பு பாடல்…

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5’ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் ஒரு சிறப்பு பாடலை எழுதி வீடியோவாக தயாரித்திருக்கிறார்.

இந்தப் பாடலை நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட, கழக தலைவர் திருமதி பா.வளர்மதி அதை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ், தென் சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் கே.எஸ். மலர்மன்னன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன், ஏற்கனவே சிலந்தி, அருவா சண்ட, ராத்ரி, அர்ஜுன், நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். சிவபெருமானைப் போற்றும் “ஓம் சிவாய நம சிவாய…” என்று தொடங்கும் இந்த பாடல் அவர் எழுதிய பத்தாவது பாடல் ஆகும். இந்த பாடலை அஜய் ஷ்ரவன் பாட, திரைப்பட இசையமைப்பாளர் பி.சி.சிவன் இசையமைக்க, யு.முத்தையன் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். இந்தப் பாடலை க்ரீன் மேஜிக் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Leave a Response