சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, இரண்டு லேப்டாப்கள் மற்றும் 2 பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக விவேக் ஜெயராமன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதன் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
தாங்கள் கோவிலாக மதித்துவரும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு காரணம், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் தங்கியிருந்ததுதான் எனவும், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது மன வேதனை அளிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக மக்களவை துணை தலைவர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கரூரில் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தி களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சோதனை தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.