சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா. அவரது கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். முதலில் அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்னர் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக அப்போது கூறப்பட்டது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்பட்டது. இந்த பிரச்சனைகள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வந்தது.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்த நடராஜன் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடராஜனுக்கு சிறுநீரக, கல்லீரல் முழுமையாக செயலிழந்து விட்டதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில், காத்திருப்போர் பட்டியலில் அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கல்லீரல் தானமாக கிடைத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லீரல் பொருத்தப்பட்டு குணமடைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.