சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே இடம் ஒதுக்கிக் கொடுத்தது.
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் மணி மண்டபம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தியது. இதனால் சிவாஜி மணி மண்டபத்தை அரசே கட்டும் என்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 2,120 சதுர அடியில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் பணி கடந்த மே மாதம் நிறைவடைந்தது.
இதனிடையே சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் சிவாஜி சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டு மணி மண்படத்திற்கு கொண்டு வரப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் திறப்பு விழா குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
வருகிற அக்டோபர் 1ந் தேதி சிவாஜியின் 90-வது பிறந்தநாள். அன்றைய தினமாவது மணி மண்டபம் திறக்கப்படுமா என சிவாஜி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி மணி மண்டம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.