முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் மொத்தம் 135 எம்.எல்ஏ.க்கள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு 21 எம்ல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மீதமுள்ள 3 கூட்டணி கட்சி எம்.எல்ஏ.க்கள், சபாநாயகர் தவிர மொத்தம் 110 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தற்போது ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆட்சிக்கு மெஜாரிட்டி தேவை என்றால் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். தற்போது 110 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால் எடப்பாடி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கூட்டிய எம்.எல்ஏ.க்கள் கூட்டத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், அதிமுக எம்.எல்ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 21 எம்.எல்ஏ.க்கள் உள்பட அதிமுக எம்.எல்ஏ.க்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் எம்.எல்ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.