அடுத்த கட்டத்தை எட்டியுள்ள தேர்தல் பிரச்சாரம் : முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? – கமல்ஹாசன் கேள்வி..!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் நடக்கும் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு வகைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக ஊடகங்கள் மூலம் தீவிர வாக்குச் சேகரிப்பை முன்னெடுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். அதன்படி இன்று வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில் கமல்ஹாசனே நடித்து சில கேள்விகளை மக்களுக்கு எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் கமல்ஹாசன் தொலைக்காட்சி பார்க்கிறார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மோடி, ஒபிஎஸ், ஹெச்.ராஜா ஆகியோர் பேசுவது போன்று குரல்கள் கேட்கிறது. கோபமடையும் கமல் ரிமோட்டை தூக்கி எறிந்து டிவியை உடைக்கிறார். பின்னர் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

அதில், “முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?

நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.

மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும்தான்.” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Response