பாஜக தேர்தல் அறிக்கை ஜீரோ : பொன்.ராதாகிருஷ்ணன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா – மு.க. ஸ்டாலின் கேள்வி..!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தத் தேர்தல் மத்தியில் நடைபெறும் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்பும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம், என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால், எதிரணியால் அவ்வாறு வாக்கு கேட்க முடியவில்லை.

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன். திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா? நாகர்கோவில் நகருக்கு சுற்றுச்சாலை அமைப்பேன் என்ற வாக்குறுதியை செயல்படுத்தினாரா? கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பேன். காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் போன்ற வாக்குறுதிகளை பொன்ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா?இது போன்ற கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.

Leave a Response