ராஜா ராணி மிகப்பெரிய படமாக இருக்கும் – அட்லீ பெருமிதம்!

raja rani

ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய அட்லீ ஆர்யா, நயன்தாராவை வைத்து இயக்கி வரும் படம் ராஜா ராணி. இதுவரை அமைதி காத்து வந்த அட்லீ தன் முதல் படம் பற்றியும், தன்னைப் பற்றியும் முதல் முறையாக மனம் திறக்கிறார்.

இது ஒரு முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான குடும்ப சித்திரம், திருமணத்துக்கு பிந்தைய ஒரு இனிமையான கால கட்டத்தை பற்றிய படமாகும். இன்றைய இளைஞர்கள் திருமண உறவு என்றாலே எட்டிகாயாய் பாவிக்கும் மன நிலையை மாற்றும் படமாக இருக்கும். ஆர்யாவும், நயன்தாராவும் பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள் திரையை தாண்டிய ஒரு உறவு பட்டவர்த்தனமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துக் கொள்வது ஆகட்டும், உதவிக் கொள்வது ஆகட்டும், வாஞ்சையுடன் அழைப்பது ஆகட்டும் அருமை! என்னுடைய விளம்பர யுத்திக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு  சூப்பர்.

இந்த படத்தின் கதையை பற்றிய வந்த சர்ச்சைகள் என்னை காயப்படுத்தினாலும், பின்னர் என்னை நானே ஆசவாசப்படுத்திக் கொண்டு நல்ல தரமான படம் கொடுப்பதே இதற்கான மருந்து என உழைக்க ஆரம்பித்து விட்டேன். ஷங்கர் சாரின் பாசறையில் பயின்றவன் என்ற பெருமை எனக்கு என்றும் உரியது. ஒரு தந்தையுடனான உறவு எனக்கு அவரிடத்தில் என்றும் உண்டு. முருகதாஸ் சார் அவர்களையும் என்னால் மறக்க முடியாது. கதையைக் கேட்ட மாத்திரமே எனக்கு அட்வான்ஸ் கொடுத்து படம் பண்ணலாம் என்ற அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் என்றென்றும் மறவேன்.

பாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு நான் படம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. என்னுடைய ஒளிபதிவாளர்  ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இசை அமைப்பாளர் G.V.பிரகாஷ் இருவரும் இப்படத்தின் முக்கிய தூண்கள். நான் இப்படத்தின் நடிகர்கள் பட்டியலை வாசித்தால் இது எவ்வளவு பெரிய படம் என தெரிய வரும். ஆர்யா, ஜெய், சத்யராஜ், சந்தானம், சத்யன், நயன்தாரா மற்றும் நசிரியா நசீம்  நடித்து உள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் இசை வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள இப்படம் இளைஞர்களை  நிச்சயம் கவரும் என கூறுகிறார் அட்லீ.