கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்ரம் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மீனவர்களை நோக்கி இந்திய கடலோர காவல் படையினர், ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள், தங்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்கள் மீது, தாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடலோர காவல் படையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ரப்பர் தோட்டா கடலோர காவல் படையினருடையது அல்ல என்று முரணான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில், ரப்பர் குண்டுகள் சட்டம் – ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம்தான் இருக்கும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது என்றும் அதில் விளக்கமளித்திருந்தார்.
ஹெச் ராஜாவின் கருத்துக்கு நெட்டிசன்கள், இந்தியகடற்படை சுடவேயில்லை; நீங்க நீட்டி முழங்க வேண்டாம் சார்! என்று பதிலளித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, மீனவர்கள் காயமடைந்தது கோஷ்டி மோதலால் என்பது போன்ற ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.