ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை, அக்., 20ல் துவங்க வேண்டும். 2016, அக்., 26ல், மழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட, ஒரு வாரம் தாமதமாக துவங்கி உள்ளது. ஆனாலும், மழை தீவிரம் அடையவில்லை. இதற்கு, தென் சீன கடலில் நிலவி வரும் கடல் சூழல் காரணம் என, கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு கிழக்கே, தென் சீன கடலில், பிலிப்பைன்ஸ் அருகே, ‘ஸவ்லா’ என்ற புயல் சுழல்கிறது. நவ., 1ல், ஜப்பானை தாக்கும் என, கணிக்கப்பட்டுள்ள இந்தப் புயல், இந்திய பெருங்கடலின் ஈரப்பதத்தை ஈர்த்து, தீவிரம் அடைகிறது. அதனால், கிழக்கு திசையிலிருந்து, தமிழகத்திற்கு ஈரப்பதம் எடுத்து வரும் காற்றின் வேகம் குறைந்து, மழையின் தீவிரம் அதிகரிக்கவில்லை.
இது குறித்து, அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், ஸ்வ்லா புயல் சுழலும் பகுதியை புகைப்படம் எடுத்துள்ளது. அதில், புயலால் காற்றின் திசை மாறி, இந்திய மற்றும் சீன கடல் பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனிடையே, ஸவ்லா புயல் கரை கடந்த பின், இந்தோனேஷியா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்.
அது, நவ., முதல் வாரத்தில், அந்தமான் வழியே, இந்திய கடற்பகுதியை நெருங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாகும் என, ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.