சசிகலாவிற்கு இன்று பிற்பகலில் பரோல் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூர் புறப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்தன.பின்னர் நேற்று நடராஜன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், சிறுநீரகம், கல்லீரல் சீராக இயங்குகிறது என்றும் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மனுவில் குறைபாடுகள் இருந்ததாலும், தமிழக காவல்துறையின் தரப்பில் மறுப்புத்தெரிவிக்கப்பட்டதாலும் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் கூடுதல் ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களுடன் மீண்டும் பரோல் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டபின், அந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் , தமிழக காவல்துறையினரும் சசிகலா வருகைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாலும் அவருக்கு இன்று பிற்பகலில் பரோல் கிடைக்குமென தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக கர்நாடகா குடகு விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரு புறப்பட்டனர். பரோலில் வெளிவரும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.