“அதிபர்” படத்தை தயாரித்த ‘பென் கண்ஸ்டோரிடியம்’ பட நிறுவனம், அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. இத்திரைப்படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாகவும், நிக்கிகல்ராணி மற்றும் பிந்துமாதவி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.
இப்படத்தி பற்றி விக்ரம்பிரபு கூறியதாவது, “திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன். ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா(நிக்கி கல்ராணி). கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி). இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம். நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்.
இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக் கொண்டு வரும் படமாக அமையும். கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்.” என சொல்கிறார் விக்ரம்பிரபு.
படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது. இப்படம் பற்றி தயாரிப்பாளர் T.சிவகுமார் கூறியதாவது, “நாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது. பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தை தொடந்து “தர்மன்” என்ற படத்தை தயாரிக்க உள்ளோம். நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம்.” என்றார் T.சிவகுமார்.
இப்படத்தின் பாடல்களை யுகபாரதி மற்றும் கபிலன் எழுத, சி.சத்யா இசையமைத்துள்ளார். கலை பணியை கதிர் மேற்கொள்ள, கல்யான் மற்றும் தினேஷ் பாதாபத்தையும், மிராக்கிள் மைகேல் சண்டை காட்சிகளையும் இயக்கியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை எஸ்.சரவணன் காட்சியாக்க, சசிகுமார் படத்தொகுப்பினை செய்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் S.S.சூர்யா. ‘பென் கண்ஸ்டோரிடியம்’ சார்பாக T.சிவகுமார் இப்படத்தினை தயாரிக்கிறார்.