சென்னை வந்த ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?

aalunar
தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவுகள் ஏற்பட்டதால், அரசு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. கடந்த 22-ந் தேதியன்று டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்துள்ள 19 எம்.எல்.ஏ.க்கள், கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு கொடுத்தனர். பின்னர் அன்றே மும்பைக்கு கவர்னர் சென்றுவிட்டார்.

மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20 எம்எல்ஏக்கள் மறைமுகமாக அவரை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. 5 அமைச்சர்களும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை 5 மணியளவில் சென்னைக்கு வந்தார். சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளதா, அதற்கு தற்போது அவசியம் ஏற்பட்டுள்ளதா என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ஆளுநர் சென்னைக்கு வந்தது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு நிகழ்ச்சிக்காகவே என்று கூறப்படுகிறது.

இதனிடையே (ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்களை ஆளுநர் சந்திக்க உள்ளார். கோரிக்கைகள் பல முனைகளில் இருந்தும் வலுத்துவருகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் 2 நாட்களில் குடியரசு தலைவரை சந்திப்போம் என கெடுவிதித்துள்ளனர். எனவே ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response