மெரீனா கடற்கரைப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வரும் பொதுமக்களில் சிலர் கடல் அலையின் வேகத்தை அறியாமல் ஆழமான கடல் பகுதிக்குச் சென்று குளிக்கும்போது சில நேரங்களில் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரையில் நீர்நிலை ஓரமாக மணல் பகுதியில் ‘அபாயகரமான கடல் பகுதி. இங்கு குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று தமிழ் மற்றும், ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்ட அறிவிப்பு பலகைகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கடற்கரையில் நீர்நிலை ஓரமாக மணற்பரப்பில் சென்று கண்காணிக்கும் சிறப்பு ஒலி பெருக்கி வசதி மற்றும் எச்சரிக்கை சுழல் விளக்குடன் கூடிய ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அதிகளவில் பொதுமக்கள் மெரீனா கடற்கரை வந்து செல்லும் அரசு விடுமுறை நாள்களில் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படை காவலர்கள் போதுமான அளவு பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் பெருநகர காவல்துறையின் குதிரைப் படையைச் சேர்ந்த காவலர்கள் குதிரையில் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். எதிர்பாராத வகையில் கடலில் மூழ்கும் நபர்களை மீட்க நன்கு நீச்சல் பயிற்சி பெற்ற மீனவர்கள் ஈடுபடுகிறார்கள்.