தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெறிவித்துள்ளது.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவரது உடல் நிலை குறித்து 9 அறிக்கைகளை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. கடந்த 10-ஆம் தேதி 9-ஆவது அறிக்கை வெளியாகி இருந்த நிலையில் இன்று 10-ஆவது அறிக்கையை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசி வருவதாகவும் உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் அமைச்சருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நிபுணர்களின் ஆலோசனை பேரில் ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.