பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:
தன்னை ஜெயலலிதாவின் சகோதரி என்று கடந்த 12, 13 ஆண்டுகளாக கூறி வந்த சைலஜா இறந்து விட்டார். அவரது இறப்புக்கு பின் அவரது மகள் அம்ருதா தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறார்.
ஜெயலலிதா தான் தனது தாயார் என்று அவர் கூறி வருகிறார். ஜெயலலிதாவுக்கு மகள் இருந்தது உண்மைதான் என்று அம்ருதாவின் உறவினர் லலிதா கூறி உள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தற்போது சென்னையில் இருந்து கீதா என்ற பெண் ஜெயலலிதாவின் தோழி என்று சொல்லிக்கொண்டு ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான் என்றும், அந்த மகள் அம்ருதா தான் என்றும் கூறி இருக்கிறார். ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். அரசியலில் அசைக்க முடியா இரும்புப்பெண்ணாக இருந்தவரின் புகழை அவரது மறைவுக்குப் பிறகு கொச்சைப்படுத்துவது வேதனையாக இருக்கிறது.
அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் லலிதா, அம்ருதா, கீதா ஆகியோர் மீது கர்நாடக போலீசில் புகார் கொடுத்து அவர்களை விரைவில் சிறைக்கு அனுப்புவேன். இனியும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.