கருணாநிதி குறித்து நான் பேசியது தவறு-மன்னிப்புக் கேட்ட கடம்பூர் ராஜூ..!

கருணாநிதி குறித்து நான் பேசியது தவறு என்றும் அதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மெரீனாவில் கருணாநிதிக்கு அதிமுக போனால் போகட்டும் என்று தான் இடம் கொடுத்தது. அதேபோல் கருணாநிதிக்கு அரசு மரியாதை தந்தது அதிமுக போட்ட பிச்சை என கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு முன்னாள் முதலமைச்சரை இப்படியா கீழ்த்தரமாக பேசுவது என கடம்பூர் ராஜூவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆட்சியே மக்கள் போடுகிற பிச்சை அப்படி இருக்கும் வேளையில் ஒரு தலைவரை இப்படி விமர்சித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து பேசுகையில் நீதிமன்றத்தில் போராடி தான் மெரீனாவில் இடத்தைப் பெற்றோம். அப்படி இருக்கும் வேளையில் அமைச்சர் கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்றார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ கருணாநிதி பற்றி அவதூறாக பேசியது தவறு தான் என்றும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Response