விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிக்கும் ‘துப்பாக்கி முனை’..!

’60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் ‘துப்பாக்கி முனை’.

கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், ‘துப்பாக்கி முனை’ படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

“சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசத்தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர, சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் கருத்து.

தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..? பெற்றது என்ன..? என்பதே இந்த ‘துப்பாக்கி முனை’ யின் கதை சுருக்கம். மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபாத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம் பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்..

இத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். செண்டிமெண்ட் மற்றும் ஆகபஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்காத ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளிலும் மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘கபாலி’, ‘வி.ஐ.பி 2’ படங்களுக்கு பிறகு ‘துப்பாக்கி முனை’ படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது.

இந்தியாவின் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவரான ‘அன்னக்கிளி’ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

 

Leave a Response