தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக சேலம் சென்றார். திண்டுக்கல் மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரம், தோமையார்புரம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளித்தனர்.
இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தோமையார்புரம் வரவேற்பின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. அப்போது மைக் பிடித்த அதிமுக நிர்வாகி, முதல்வர் எடப்பாடியாருக்கு வழிவிடுங்கள்..வழிவிடுங்கள் என கூறி சிரிப்பை வரவழைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் எவருமே கலந்து கொள்ளவில்லை. என்னதான் அதிமுக அணிகள் இணைந்தாலும் இன்னமும் ஒட்டாமலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் முதல்வர் எடப்பாடியாருக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.