சாதி பிரச்சினையால் சடலத்தை ஊருக்குள் புதைக்க விடாமல் தடுத்தவர் கைது!

வாணியம்பாடி அருகே சாதி பிரச்சனையால் சடலத்தை ஊருக்குள் உள்ள மயானத்தில் புதைக்க மறுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்தை எதிர்த்த ஒரு தரப்பினர் டிஎஸ்பி அலுவலகம் முன்பு குவிந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவர், 9 மாதங்களுக்கு முன்பு துறையறி கிராமத்தை சேர்ந்த மாற்று சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

கடந்த 5ம் தேதி சசிகுமாரின் பாட்டி கனகா என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவருடைய சடலத்தை ஊருக்குள் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்த அந்த ஊர் மக்கள், சசிகுமார் ஊரைவிட்டு சென்றால் தான் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியும் என தடுத்ததாக தெரிகிறது. பின்னர் வேறு இடத்தில் மூதாட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் சசிகுமார் புகார் அளித்தார். அதன்படி, ஊராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் பாபு, வேலு, பாலு, உதயகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர்களில், பழனி என்பவர் பெங்களூருவில் கைதான நிலையில், கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் முன்பு கூடி அவரை விடுவிக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response