இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் ஒன்று ஜொமோட்டோ (Zomato). ஆப் (App) மூலமாக உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று உணவை டெலிவரி செய்யும் பணியை ஜொமோட்டோ நிறுவனம் செய்து வருகிறது.
ஜொமோட்டோ நிறுவனத்தின் கீழ், ஆயிரக்கணக்கான உணவு டெலிவரி பார்ட்னர்கள் (Delivery Partners) வேலை செய்து வருகின்றனர். இதில் நிறைய பேர் ஏகப்பட்ட சிரமங்களை சந்தித்து கொண்டுள்ளனர். ஒரு சில வாடிக்கையாளர்கள், உணவு டெலிவரி பார்ட்னர்களை மோசமான முறையில் நடத்துவதுதான் இதற்கு காரணம்.
ஒரு சில வாடிக்கையாளர்கள், உணவு டெலிவரி பார்ட்னர்களை மனிதாபிமானம் இல்லாமல் நடத்தியது தொடர்பான செய்திகள், கடந்த காலங்களில் பல முறை வெளியாகியுள்ளன. சாதாரண டெலிவரி பார்ட்னர்கள் மட்டுமே சந்தித்து வந்த இது போன்ற பிரச்னைகளை, தற்போது ஜொமோட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியே (CEO) சந்தித்துள்ளார்.
ஜொமோட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தீபீந்தர் கோயல் (Deepinder Goyal). இவர் தீவிரமான கார் காதலர் ஆவார். அஸ்டர் மார்ட்டின் டிபி12 (Aston Martin DB12), ஃபெராரி ரோமா (Ferrari Roma), போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) என ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்களை, தீபீந்தர் கோயல் வைத்துள்ளார்.
இப்படி மிகவும் விலை உயர்ந்த கார் கலெக்ஸனை (Car Collection) கொண்டிருந்தாலும் கூட, தீபீந்தர் கோயல் தற்போது ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராம் (Gurugram) நகரில் பைக்கில் தெரு தெருவாக சுற்றி கொண்டுள்ளார். அங்குதான் ஜொமோட்டோ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் (Headquarters) அமைந்துள்ளது.
தலைமை செயல் அதிகாரி என்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் கூட, அடி மட்ட அளவில் என்ன நடக்கிறது? உணவு டெலிவரி பார்ட்னர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என தீபீந்தர் கோயல் விரும்புகிறார். இதற்காக உணவு டெலிவரி பார்ட்னராகவே அவர் தற்போது மாறியுள்ளார்.
ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Triumph Scrambler 400X) பைக்கில் சென்று, அவர் உணவுகளை டெலிவரி செய்து கொண்டுள்ளார். உடன் தனது மனைவி க்ரேஸியா முனோஸையும் (Grecia Munoz) அவர் உடன் அழைத்து சென்று கொண்டுள்ளார். அப்படி உணவு டெலிவரி செய்ய சென்றபோது ஏற்பட்ட மோசமான அனுபவத்தை, அவர் வீடியோ மூலமாக, சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புதுமையான முயற்சியின், 2வது ஆர்டரை டெலிவரி செய்ய சென்றபோது, தீபீந்தர் கோயலுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. குருகிராம் நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் செயல்பட்டு வரும் கடையில் இருந்து உணவை டெலிவரி எடுக்க வேண்டிய சூழல் தீபீந்தர் கோயலுக்கு உண்டாகியுள்ளது.
அப்போது ஷாப்பிங் மாலில் இருந்த ஊழியர்கள், அவரை வேறு வழியில் வரும்படி கூறியுள்ளனர். அதாவது அவர்களுக்கு வந்திருப்பது, ஜொமோட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபீந்தர் கோயல் என்பது அடையாளம் தெரியவில்லை. சாதாரண உணவு டெலிவரி பார்ட்னர் என நினைத்து விட்டனர்.
எனவே ‘மெயின் கேட்’ வழியாக வருவதற்கு பதிலாக, வேறு வழியில் வரும்படி தெரிவித்துள்ளனர். அந்த வழியில் ‘லிஃப்ட்’ கிடையாது. படிக்கட்டுகள் மட்டுமே இருக்கின்றன. உணவு டெலிவரி பார்ட்னர்கள் ‘லிஃப்ட்’ பயன்படுத்த கூடாதாம். படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம். எனவேதான் தீபீந்தர் கோயலையும் அவர்கள் வேறு வழியில் வரும்படி தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக படிக்கட்டுகளை பயன்படுத்தி, 3வது மாடிக்கு தீபீந்தர் கோயல் சென்றுள்ளார். அதன் பின் அங்கு ஏற்கனவே காத்து கொண்டிருந்த ஒரு சில உணவு டெலிவரி பார்ட்னர்களிடம், வேலை தொடர்பான கருத்துக்களை தீபீந்தர் கோயல் கேட்டு பெற்று கொண்டார். இதன் பின்னர் இறுதியாக அந்த உணவை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய மீண்டும் புறப்பட்டு சென்றார்.
சம்பந்தப்பட்ட ஷாப்பிங் மாலில் நடந்த சம்பவங்களை எல்லாம் தீபீந்தர் கோயல் வீடியோ வடிவில் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவுடன், ஒரு சில கருத்துக்களையும், தீபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
https://x.com/deepigoyal/status/1842912929118580887?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1842912929118580887%7Ctwgr%5Ea8556fa2516c4c625283ebbc23735325e64c9e31%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
”அனைத்து டெலிவரி பார்ட்னர்களின் பணி சூழலை மேம்படுத்த வேண்டுமென்றால், ஷாப்பிங் மால் நிர்வாகங்களுடன், நாங்கள் இன்னும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஷாப்பிங் மால் நிர்வாகங்கள், உணவு டெலிவரி பார்ட்னர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கவே செய்கிறது.
சரி, தீபீந்தர் கோயல் உணவு டெலிவரி செய்ய பயன்படுத்தி வரும் பைக்கின் விலை எவ்வளவு? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த பைக், 2.64 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த பைக்கில், 398.15 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 40 பிஎஸ் பவர் மற்றும் 37.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பைக்கில்தான், தீபீந்தர் கோயல் உணவு டெலிவரி செய்து கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஷாப்பிங் மால்கள் மட்டுமல்லாது, ஒரு சில அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் கூட, உணவு டெலிவரி பார்ட்னர்கள், ‘லிஃப்ட்’ பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக ஒரு சில சமயங்களில், உணவு டெலிவரி பார்ட்னர்கள் படிக்கட்டுகள் மூலம் பல மாடிகள் ஏறி செல்ல வேண்டியுள்ளது. உணவு டெலிவரி பார்ட்னர்களை மனிதாபிமானத்துடனும், மரியாதையாகவும் நடத்த வேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம். எனவே அனைத்து இடங்களிலும் அவர்களையும் ‘லிஃப்ட்’ பயன்படுத்த அனுமதித்தால் நன்றாக இருக்கும்.
இதற்கிடையே உணவு டெலிவரி பார்ட்னர்கள் உள்பட பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்தும் ஷாப்பிங் மால்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்பேரில், அரசு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் பெங்களூர் நகரில் வேட்டி அணிந்த காரணத்தால், விவசாயியை உள்ளே விட மறுத்த ஷாப்பிங் மால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.