முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது! – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்…

3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் சில தினங்கள் முன்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது:

தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசியதாவது, ” ‘மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். இது கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா’.

கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார்.” என்றார் தயாரிப்பாளர் எம்.டி.விஜய்.

நாயகன் ரிஷி ரித்விக் பேசியதாவது, “இப்படத்தின் கதையைக் கேட்டதும் சமுதாயத்திற்கு சிறந்த கருத்தைக் கூறும் படமாக இருந்தது. ஆகையால், எனக்கு சம்பளம் வேண்டாம் நான் நடிக்கிறேன் என்று கூறினேன்.” என்றார் ரிஷி ரித்விக்.

இசையமைப்பாளர் கார்த்திக் குரு பேசியதாவது, “இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் சினிமா துறைக்கே வந்தேன். ஆனால், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இசையை விட்டு வேறு துறைக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்தேன். எம்.டி.விஜய் மற்றும் எம்.டி.ஆனந்த் இருவரும் மீண்டும் இசை துறைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இப்படத்தில் எம்.டி.விஜயும் எம்.டி.ஆனந்தும் முழு சுதந்திரம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆகையால் தான் என்னால் சிறப்பாக இசையமைக்க முடிந்தது.

இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடிக் கொடுத்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வருவதற்கு பின்னணி பாடகர்கள் தான் காரணம்.” என்றார் கார்த்திக் குரு.

கதாநாயகி ஆஷா பேசியதாவது, “இயக்குநர் மிகவும் வித்தியாசமானவர். எங்களை எங்கள் போக்குக்கு நடிக்க விட்டுவிட்டு, தவறு இருக்குமிடத்தில் மட்டும் சரி செய்வார். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் ரிஷி பயப்படாதீர்கள் என்று கூறிக் கொண்டிருப்பார்.” என்றார் ஆஷா.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, “மம்முட்டி போல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்க சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமா துறையை நசுக்குகிறது. இது தொடர்ந்தால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்.

ரிஷி ரித்விக்கைப் பார்க்கும் போது தமிழ் படத்திற்கு அர்னால்டு கிடைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதைப் பார்த்து போதை பொருட்களுக்கு பாதிக்கபட்டவர்கள் திருந்த வேண்டும்.” என்றார் கே.ராஜன்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, “வரி கட்டுவதற்காக போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது.” என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதற்கு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பதிலளித்தார்.

மேலும் அவர் பேசியதாவது, “பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்றார் ஆர்.வி.உதயகுமார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “இந்த படத்தின் பெயருக்கு அர்த்தம் கேட்ட போது, கஞ்சா என்று கூறினார்கள். 45 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா அடித்திருக்கிறேன். ஒரு முறை போதையில் என் நண்பன் தன்னிலையறியாமல் இருப்பதைப் பார்த்தேன். இப்படி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது என்று அன்று முதல் கஞ்சா அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டேன். இப்படம் கஞ்சா உபயோகிப்பதன் பாதிப்பை கூறுவதால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வாக அமையும்.” என்றார் பாக்யராஜ்.

இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசியதாவது, “இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா.

அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன்.

மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே.

கார்த்திக் குரு இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது.

‘அட்டு’ படத்தைப் பார்த்து இது மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என் தம்பியிடம் கூறினேன். ஆனால், ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக்கை வைத்து படம் இயக்கியத்தில் மகிழ்ச்சி.

நாயகி ஆஷா எல்லா விதமான காட்சிகளிலும் தைரியமாக நடிக்க கூடியவர்.’ என்றார் இயக்குநர் எம்.டி.ஆனந்த்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது, “என்னை இந்த விழாவிற்கு அழைத்த போது, இவ்வளவு பெரிய அரங்கத்தில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு என்ன கூட்டம் வந்து விட போகிறது என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்துவிட்டது. திரைப்படம் மூலம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார் செல்வமணி.

நிகழ்ச்சியின் இறுதியாக, ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

இப்படத்தில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும், ஆஷா பார்த்தாலோம் கதாநாயகியகவும் நடிக்க, அவர்களுடன் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், காண ஹரிஷ், மதுரை ஜோசப் மற்றும் ஜனனி நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கார்த்திக் குரு இசையமைக்க, பாலா ரோசய்யா ஒளிப்பதிவை செய்ய, தாயாரிப்பாளர் எம்.டி.விஜய் இப்படத்தின் படத்தொகுப்பினை செய்துள்ளார்.

விரைவில் வெளியாகவிற்கும் இப்படத்தை எம்.டி.ஆனந்த் இயக்கியுள்ளார்.

Leave a Response