தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைத்திடவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு பயங்கரம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் துரோகக் கும்பல் சொந்த மக்களையே நரவேட்டையாடியது. நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை வெறிபிடித்த மிருகங்களாக மாறி தலை,நெற்றி, வாய், கழுத்து,மார்பு, வயிறு ஆகிய இடங்களில் குறிவைத்து குண்டுகளைப் பாய்ச்சி கொன்று குவித்தனர்.

‘சுவாசிக்கிற காற்றையும், குடிக்கிற தண்ணீரையும் நச்சாக மாற்றி எங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று அந்த மக்கள் கேட்டதற்காக ஹிட்லர், இடி அமீன் போன்றோரை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்த துரோக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர். அதிலும் 12 ஆம் வகுப்பு மாணவியான அன்பு மகள் ஸ்னோலின் வாய்க்குள் சுடப்பட்டு வீழ்ந்து கிடந்த கோரத்தை எப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 22 வயதான காளியப்பனைச் சுட்டுக்கொன்று அவரது சடலத்தைக் காவல்துறையினர் காலால் எட்டி உதைத்துத் தள்ளிய கொடுமையை எவ்வாறு மறக்க முடியும்?

இப்படி 13 பேரையுமே மிகக் கொடூரமான முறையில்தான் பழனிச்சாமியின் காவல்துறை சுட்டு வீழ்த்தியது. அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகும், முதலமைச்சரான பழனிச்சாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. உகாண்டாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் யாராவது இறந்தால் கூட உடனே டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டின் தூத்துக்குடியில் நடந்ததற்கும் தமக்கும் தொடர்பே இல்லாதது போல இருந்துவிட்டார்.

‘மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்பதை மறந்து துரோக ஆட்சியாளர்கள் ஆடிய வெறியாட்டம் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டது. ஆனாலும் அந்த துயரத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் எப்படியாவது மீண்டும் ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் துடிக்கிறது. பெயருக்கு அவர்களை எதிர்ப்பது போல நாடகமாடும் துரோக கும்பல், ‘ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக்கூடாது’ என்ற கொள்கை முடிவை தமிழக அமைச்சரவையில் வைத்து உடனடியாக எடுக்க வேண்டும்.

கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திட வேண்டும். பதற்றம் மிகுந்திருந்த நாட்களில் யாரையுமே உள்ளேவிடாத தூத்துக்குடி மக்கள், தங்களோடு என்னையும் இருக்கச் சொல்லி, தங்களில் ஒருவனாக நினைத்து பக்கத்தில் அமர வைத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட மணித்துளிகள் மனதைவிட்டு அகலவில்லை. அந்த உள்ளன்போடும், உரிமையோடும் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் நிற்கும் என்ற உறுதியை முதலாமாண்டு நினைவு தினத்தில் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response