23-ந் தேதிக்கு பிறகு, ஸ்டாலின் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் – கனிமொழி நம்பிக்கை..!

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு, ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்று திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் சி.சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவையில் இருந்து நேற்று 50 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்களிடம் கூறிய பின்னர் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. நான் ஏற்கனவே கூறிய படி தேர்தல் தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.

தேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லை என்று கூறிய கனிமொழி, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக கனவு தான் காண முடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு, தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று பழனிசாமி கனவு கண்டிருக்கமாட்டார் என்றும் கூறினார்.

வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது என்றார். மேலும், ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Response