18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் – கமல்ஹாசன் அதிரடி..!

எம்பி தேர்தல் மட்டுமில்லை.. வரப்போகும் சட்டசபை இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? மாட்டாரா என்ற கேள்வி எழுந்து வந்தநிலையில், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்தார் கமல்ஹாசன். இதையடுத்து கட்சி சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கட்சிக்கான தேர்தல் சின்னமாக டார்ச் லைட்டும் கிடைத்துள்ளது.

“நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்” என்று சொன்ன கமல், இப்போது அடுத்த அதிரடியாக சட்டசபை இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதாக கூறியிருக்கிறார்.

21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதை பற்றிய அறிவிப்பினை இதுவரை கமல் சொல்லவில்லை. இதனால் வெறும் எம்பி தேர்தலில் மட்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும்,இதற்கு விருப்ப மனு அளிப்பவர்கள் 10 ஆயிரம் ரூபாய் டிமாண்ட் டிராப்ட் செலுத்தி பெற்று கொள்ளலாம் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்ப மனுக்களை இன்று முதல் பெறலாம் என்றும் மனுக்களை விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டசபை இடைத் தேர்தலிலும் கமல் கட்சி போட்டியிடுவதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. ஒரு பக்கம் ரஜினி தேர்தல்களைக் கண்டு காத தூரம் ஓடி வரும் நிலையில் கமல் எதற்கும் அஞ்சாமல் மக்களை மட்டும் நம்பி துணிச்சலுடன் எதிர்கொள்வது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response