தமிழிசை வளர வேண்டும், அவர் இன்னும் குழந்தையாவே இருக்கிறார்-துரைமுருகன்..!

தமிழிசை வளர வேண்டும், அவர் இன்னும் குழந்தையாவே இருக்கிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கந்தன்சாவடியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 16-ம் தேதி சைதாப்பேட்டையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவர் தமிழிசையிடம், பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு துரைமுருகன் அளித்த பதிலாவது, இதென்ன ஆச்சர்யம்னு தெரியல. உலகத்தில் பெரிய எலிசபெத் ராணியா தமிழிசை? யாரும் எதையும் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு. இது ஜனநாயக நாடு. யாரும் எதையும் கேட்டுக்கொண்டுதான் இருப்பான்.

சீட்டு வந்துகொண்டே இருக்கும். பதில் சொல்ல வேண்டும். எல்லாம் பொதுவுடைமை என்று சொல்கிறாயே எனப் பெரியாரை ஆத்திரமூட்டும் விதத்தில் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்குத் தக்க பதில் கூறினார் பெரியார்.

ஆகையால் ஒருவர் கேள்வி கேட்பதே தவறு, அதற்குப் பயந்துகொண்டு அவரை அடிப்பது, அவர் மீது வழக்குபோடுவது, சிறைக்குள் தள்ளுவது என்ன நடைமுறை என்று தெரியவில்லை.

தமிழிசை அரசியலில் இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். சின்னக் குழந்தையிலிருந்து எனக்கு தமிழிசையைத் தெரியும். இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்”. இவ்வாறு துரைமுருகன் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கலாய்த்துள்ளார்.

Leave a Response