திமுகவின் வழி நடத்தக் கூடியவராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி-கனிமொழி புகழாரம்..!

திமுகவின் வழி நடத்தக் கூடியவராக மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி என்பதில் சந்தேகம் இல்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.

திமுக பொதுக்குழுவில், மு.க.ஸ்டாலின் அக்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்கினர். கனிமொழி பேசும்போது கூறியதாவது: மனதில் முகத்தில் புன்னகையை புகட்டக்கூடிய வாய்ப்பை இந்த நாள் கொடுத்திருக்கிறது. இவர் என் தலைவர், இவரைப் பெற்றிருப்பதற்கு எத்தனை பேறு பெற்றிருக்கிறேன் என்று நெகிழ்கிறேன். உச்சி சூரியனை இயற்கை பறித்துக் கொண்டது.

இருள்மை கவிழ்ந்தது, திசையறியா காட்டில் தமிழ் இனமே நின்று கொண்டிருந்தது. கிழக்குச் சூரியனாக இப்போது உதித்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின். திமுகவின் வழி நடத்தக் கூடியவராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி என்பதில் சந்தேகம் இல்லை. யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை.

தலைவர் பதவி பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான். கட்சிக்கு முன் நாம் எதுவும் இல்லை. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு, ஒரு முகமறியா முதல்வர் முன்பு போய் நின்றார் ஸ்டாலின்.

பிரதமர்களையெல்லாம் உருவாக்கிய தலைவருக்காக, பிரதமரை தமிழகத்திலேயே கால் வைக்கவிடாமல் விரட்டிய ஸ்டாலின், ஒரு முதல்வர் முன்பாக போய் தழுதழுத்த குரலில், கருணாநிதிக்கு இடம் கேட்டார்.

தளபதியாக பிரதமரையே தமிழகத்தில் கால் வைக்க விடாமல் செய்தவர் ஸ்டாலின். ஆனால், ஒரு தலைவராக, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் பெற்று கொடுத்தார். அவர்கள் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் எல்லாம் போராட்டம் நடத்தலாம் என கூறினோம். ஆனால், ஸ்டாலின் சட்டத்தின் உதவியை நாடினார்.

ஸ்டாலின் கோபப்பட்டிருந்தால், அன்றையதினம் மொத்த தமிழகமும் ஸ்டாலின் பின்னால் வந்திருக்கும். எத்தனை உயிர்களை இழந்திருப்போம். மனசாட்சியற்ற ஆட்சியாளர்கள் இங்கே இருக்கிறார்கள். எனவே துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கும். ஆனால், ஒரு தலைவனாக அதுபோன்ற சூழலை தவிர்த்து, கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றினார். கண்ணியத்தை காத்து தலைவராக நிமிர்ந்து நின்றார். மகனாகவும், தலைவராகவும் நிரூபித்த தருணம் அது. ஒரு தலைவர் என்பதற்கு இலக்கணம் அது. இவ்வாறு கனிமொழி பேசினார்.

Leave a Response