மத்திய அரசு தமிழக அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்-ஜெயக்குமார் ஆவேசம்..!

மத்திய அரசு தமிழக அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார் ஜெயக்குமார்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகமாக நடக்கிறது” என குறிப்பிட்டு பேசினார். முதலில் இதுகுறித்து பேசியிருந்த அமைச்சர் ஜெயக்குமார் சொட்டு நீர் பாசனம் என அமித்ஷா பேசியதை சிறுநீர் பாசனம் என ஹெச்.ராஜா மொழி பெயர்த்துள்ளார். அதுபோல், அதிமுகவை பற்றி அமித்ஷா நல்ல விதமாகத்தான் பேசியிருப்பார்.

ஹெச்.ராஜா அதை தவறாக மொழி பெயர்த்திருக்கலாம் என மலுப்பலாக பதிலளித்திருந்தார். இந்நிலையில் காமராஜரின் 116ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, மெரினாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், மத்தியில் இருப்பவர்கள் மாநில அரசை குற்றம் சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மத்திய அரசு தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

பாஜகவின் தயவால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுவதால், அமைச்சர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என பலர் கூறி வந்த நிலையில், ஜெயக்குமார் இப்படி பேசியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response