சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா-கமல்ஹாசன்..!

சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா என்று சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து புது தில்லியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கிய கமல்ஹாசன் அதனை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்திருந்தார். அதற்கான ஆவணங்களையும் அவர் முன்னரே தாக்கல் செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக புதனன்று மக்கள் நீதி மய்யதிற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்காக அவர் தில்லி வந்துள்ளார். தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க வந்துள்ளேன். சந்தித்த பின்னரே உங்களிடம் தெரிவிக்க முடியும். சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்கு அவர், ‘எந்தத் திட்டம் என்றாலும் சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா? ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களின் கவலைதான் இது. எனக்கும் அதே எண்ணம்தான் உள்ளது’ என்று தெரிவித்தார்.

Leave a Response