ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவினார்களாம்-சொல்கிறார் சு.சாமி..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற அதற்குள் புகுந்த தீவிரவாதிகள்தான் காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு வன்முறையாக மாறுவதற்கு காரணம், தீவிரவாத குழுக்களின் ஊடுருவல்தான். வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணத்தை இறக்குமதி செய்து வந்த கிறிஸ்தவ என்ஜிவோக்கள் சிலவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. அந்த கோபத்தில் சில கிறிஸ்தவ மிஷினரிகள் தூத்துக்குடி போராட்டத்தை தூண்டின.

இதேபோல ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட சில இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள், விடுதலை புலிகளில் எஞ்சியவர்கள் இணைந்துதான் அரசுக்கு எதிராக வன்முறையை உருவாக்கியுள்ளதாக சந்தேகிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும், இதே குழுக்கள் உள்ளே ஊடுருவின. அதுகுறித்து உரிய விசாரணை நடத்த ஏற்கனவே நான் கோரிக்கைவிடுத்திருந்தேன்.

ரஜினிகாந்த் பேசுவதற்கெல்லாம் நான் கருத்து கூற முடியாது. இன்று ஒரு கருத்தை கூறிவிட்டு நாளை வேறு கருத்தை கூறினால் நானும் அதற்கு வக்காலத்து வாங்க முடியாது. ரஜினிகாந்த் நடவடிக்கையை 1 வருடமாவது பொறுத்திருந்து பார்த்தால்தான் என்னால் கருத்து கூற முடியும்.

மொத்தத்தில், நடிகர்களை விலக்கியே வையுங்கள் என்றுதான் நான் பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

Leave a Response