தூத்துக்குடி சம்பவம் குறித்து விளக்கம் இல்லாததால் சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு..!

முதல்வரின் விளக்க அறிக்கையில் தூத்துக்குடி சம்பவம் குறித்து விளக்கம் இல்லாததால் சட்டசபையில் இருந்து தி.மு.க. இன்று வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எந்த குறிப்பும் இல்லாததால் கோபமடைந்த ஸ்டாலின் முதல்வரின் அறிக்கையை ஏற்க மறுத்ததோடு முதலமைச்சர் பதவி விலகும்வரை இனி பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை கண்துடைப்பு நாடகம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவை எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். இல்லையென்றால் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீடு செய்து ஆலையை மீண்டும் திறக்கும் நிலை உருவாகும் என்றார்.

அதேபோல் ஸ்டெர்லைட் படுகொலையில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Leave a Response