ஊழலுக்கே பெயர்போனது திமுக தான்-அமைச்சர் ஜெயக்குமார்

ஊழலுக்காகவே ஒரு ஆட்சி கலைக்கப்பட்டதென்றால் அது, திமுக ஆட்சி தான் எனவும் ஒட்டுமொத்த ஊழலையும் குத்தகைக்கு எடுத்த கட்சி திமுக தான் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், அம்மா நாளிதழில், பாஜகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டதாக எழுதப்பட்டிருந்த கட்டுரை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்டுரை எழுதப்பட்டதாலேயே கூட்டணி என்று அர்த்தமில்லை. இப்போது எதையும் சொல்லமுடியாது. தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் கைது செய்யப்படுவார்கள் என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பல பழமொழிகளை கூறி பதிலளித்தார்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வராது. ஊழலுக்கே பெயர்போனது திமுக தான். ஊழலுக்காகவே ஒரு ஆட்சி கலைக்கப்பட்டதென்றால் அது, திமுக ஆட்சி மட்டும்தான். ஸ்டாலின் கூறியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றார்.

மேலும் காமாலை வந்தவர்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல ஊழலில் திளைத்த திமுகவிற்கு அனைத்துமே ஊழலாக தெரிகிறது. எங்களுக்கு மடியில் கனம் இல்லை; எனவே வழியில் பயம் இல்லை எனவும் ஒட்டுமொத்த ஊழலையும் குத்தகைக்கு எடுத்த கட்சி திமுக தான் என்றும் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.

Leave a Response