யாரும் தீக்குளிக்காதீர்கள் கரம்கூப்பி வேண்டுகிறேன்-வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தன் மைத்துனர் மகன் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள நிலையில், யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளில் ஈடுபடக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விருதுநகரை சேர்ந்த வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் (50) இன்று (வெள்ளிக்கிழமை) தீக்குளித்து தர்கொலை முயற்சி செய்தார். தற்போது 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய மனைவி ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவண சுரேஷ். மதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவர். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பார்.

சரவண சுரேஷின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவரது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.

மதிமுக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் வந்து எனது உறவினர் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். கடந்த சில நாட்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தார்.

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து வியாழக்கிழமை நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறார். ஆசிரியையாகப் பணியாற்றும் அவரது மனைவி அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள். உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்?

வியாழக்கிழமை இரவு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கடலூர் பொதுக்கூட்டத்தில்,”இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

இன்று என் குடும்பத்துப் பிள்ளையே காவிரிக்காக தீக்குளித்தார் எனும்போது, என்னை நான் தேற்றிக்கொண்டாலும், சரவண சுரேஷின் பெற்றோருக்கும், என் துணைவியாருக்கும் உறவினர்களுக்கும் எப்படி தேறுதல் கூற முடியும்? என் பொதுவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் மனைவி தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர் செல்பேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது. நொறுங்கிப்போன இதயத்தோடு யாரும் தீக்குளிக்காதீர்கள் என்று மீண்டும் கரம்கூப்பி வேண்டுகிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Response