கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் மற்றும் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று காலை நாகர்கோவில் வந்தார். பின்னர் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் அமைச்சர் உதயகுமார் கூறும்போது;-
“குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவையான நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்படும். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் வினியோகத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது“ என்று தெரிவித்தார்..
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 159 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் 58 பேர் கரை திரும்பி உள்ளார்கள். மீதம் உள்ள 101 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காணாமல் போன மீனவர்களை கப்பற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் மூலமாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள்” என்றூ அவர் கூறினார்.