தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் சுமார் 75 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் தாங்கள் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவும், மகன் ஜெ. தீபக்கும் கோரி வருகின்றனர்.
அவர் திருமணம் செய்யாமல் இருந்ததாலும், அவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லாததாலும், பலர் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி வருகிறார்கள். ஏற்கனவே ஒருசிலர் இதுபோல வாரிசு கொண்டாடி பின்னர் அவர்களுக்கு கோர்ட்டு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது, மஞ்சுளா @ அம்ரூதா என்ற பெண், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘நான் பிறந்ததிலிருந்து பெங்களூருவில் வசித்துவருகிறேன். நான், ஜெயலலிதா வுக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை. 1980-ம் ஆண்டு பிறந்தேன்.
ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் இந்த உண்மையை மறைத்தேன். தற்போது வளர்ப்பு தந்தை கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டதால் உண்மையை கூறுகிறேன்.
இந்த உண்மை எனக்கு மார்ச் மாதம்தான் தெரியும். எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து அவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இரு மரபணுகளையும் சோதனை செய்து நான்தான் ஜெ.வின் மகள் என அறிவிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ ஐயங்கார் முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இவர் ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம், ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதி மன்ற தலைமைநீதி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.