ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவைச் சேர்ந்த 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விவசாயம் குறித்த செயல்முறைகளை அறிந்து கொள்ளவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பள்ளி வளாகத்தில் அவர்களாகவே காய்கறித் தோட்டம் ஒன்றை அமைத்தனர்.
அதில், வெண்டை, கத்திரி, மிளகாய், புடலை உள்ளிட்ட காய்கறிகளுடன், பசலைக் கீரையும் சாகுபடி செய்தனர். நிலம் தயாரித்தல், பாத்தி அமைத்தல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்ப் பாய்ச்சுதல் என அனைத்துப் பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டனர்.
தற்போது இந்தச் செடிகளில், காய்கறிகள் நன்றாக விளைந்து அமோக விளைச்சல் அடைந்துள்ளன.
இரசாயன உரமிடாமல், இயற்கை நுண்ணூட்டங்கள் மற்றும் உரங்கள் மூலமாக விளைந்த காய்கறி, கீரைகளை தினமும் அறுவடை செய்து, பள்ளியில் தயாரிக்கப்படும் சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர் மாணவர்கள்.
மாணவர்களின் இந்தச் செயலுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.