ஒரு வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டோடு இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்பட படைப்பு பயிற்சி மையம் !

nadippu
சென்னையில் புதிதாக “நடிப்பு கொட்டகை” எனும் திரைப்பட படைப்பு பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையம் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்பட்டது. மையத்தை தமிழ் நாடு கூட்டமைப்பு அறக்கட்டளை துவங்கியுள்ளது.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை அலுவலகத்தின் பயிற்சி மைய தொடக்க விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாற்றுத்திறனாளிகள் துறைகளுக்கான மாநில ஆணையர் வி.அருண்ராய், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.வி. உதயகுமார், வரன், இயக்குநர் வளர்மதி, நடிகர் லிவிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இந்த அறக்கட்டளைத் தலைவர் பி.சிம்மச்சந்திரன் கூறியது:-

பொதுமக்களுக்கு நடிப்புப் பயிற்சியும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு திரைப்பட படைப்புப் பயிற்சியும் அளிக்கும் வகையில் ‘நடிப்புக் கொட்டகை’ எனும் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம் மையம் பகுதி நேர வகுப்பாக மாலை நேரத்திலும், வார இறுதி நாள்களிலும் நடைபெறும்.
இங்கு திரைக்கதை, பாடல், உரையாடல், இயக்கம், கேமரா அடிப்படை, திரைப்படத் திறனாய்வு போன்றவை கற்பிக்கப்படும். தவழும் நிலையில் உள்ளோர் பயிற்சி பெறும் விதத்தில் படத்தொகுப்பு, அனிமேஷன், கிராபிக்ஸ் பயிற்சிகளும் மற்றும் பார்வை சவால்களை சந்திப்போருக்கு ரேடியோ ஜாக்கி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இதனை சென்னை, தரமணி அரசு திரைப்படக் கல்லூரியின் முன்னாள் திரைப்படப் பேராசிரியர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற மதன் கேப்ரியல் வடிவமைத்து வழி நடத்த உள்ளார்.
ஒரு வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டோடு இருக்கக் கூடிய தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளிகள், தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு இந்தப் பயிற்சி மையம் வரப்பிரசாதமாக இருக்கும்.

Leave a Response