மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு திவ்யா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் 3 பெண்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மதுரை, ஒத்தக்கடை முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவரது கணவர் 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலமில்லாமல் உயிரிழந்துவிட்டார். திவ்யாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகம் வந்த திவ்யா, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு
தற்கொலைக்கு முயன்றார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரையும் 2 குழந்தைகளையும் மீட்டனர்.
தற்கொலைக்கு முயன்றது குறித்து திவ்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நானும் தவிடன் என்பவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒத்தக்கடை முத்துசாமிபுரத்தல் வசித்து வருகிறோம். எனது கணவருக்கு உடல்நலமில்லாத காரணத்தால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மரணமடைந்து விட்டார். அதன்பிறகு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டை அபகரித்தும், ஊரைவிட்டு துரத்தும் எண்ணத்தில் அந்த பகுதியில் பிரபாகரன், சேகர், முத்துராக்கு ஆகியோர் மிரட்டி வருவதாக கூறினார். மேலும் எங்கள் குடும்பத்தைப் பற்றி அதூறு பரப்பி வருகிறார்கள். என் அத்தை கஞ்சா விற்பதாக பொய்யாக புகாரளித்து அவரை சிறைக்கு அனுப்பினார்கள்.
தற்போது எங்களை ஊர் விலக்கம் செய்து, பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்காத வகையில் செய்து வருகிறார்கள். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறினார். அது மட்டுமல்லாது புகார் கொடுத்தை வாபஸ் வாங்குமாறு தங்களை மிரட்டுகிறார்கள் என்றும் அதனால் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் திவ்யா கூறினார். இதனை அடுத்து, திவ்யாவின் பிரச்சனையை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திவ்யா தீக்குளிக்க முயன்றபோது, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். இதனால் அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமை காரணமாக தங்கள் இரண்டு மகள்களுடன் தம்பதி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிக்க முயலும் சம்பவம் அதிகரித்து வருகிறது.