நடிகர் கமல்ஹாசன் கடந்த ஓராண்டாக அரசியல்வாதிகள் மற்றும் அரசை விமர்சித்து டிவிட்டி வந்தார். அரசியலக்கு விரைவில் வருவேன் என்றும் அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.
அவரது பிறந்த நாளான வரும் நவம்பர் 7ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் அதனை கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆப் நடிகர் கமல், அவரது நற்பணி இயக்கம் மற்றும் பொதுமக்களை இணைக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கான அறிமுக விழா சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அடையாறில் நேற்று விவசாயிகள் மத்தியில் பேசிய கமல் பரபரப்பை பற்றவைத்துள்ளார். இன்று ரசிகர்கள் மத்தியில் கமல் பேச உள்ள பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.