தீபாவளி அன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி குறித்தும் டிஜிட்டல் இந்தியா குறித்தும் தவறாக சித்தரிக்கும்படியான வசனங்கள் இருந்தன. அதனால் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் தமிழிசை செளந்தரராஜன்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக தங்களது கருத்தைப் பதிவு செய்து வருகின்றன. தேசிய அரசியலில் மெர்சல் குறித்தான விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், மெர்சல் படம் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக, கட்டப்பஞ்சாயத்து செய்து நிலத்தை அபகரிப்பவர் என்று திருமாவளவனைக் குறிப்பிட்டார் தமிழிசை. அதனால், தமிழகமெங்கும் வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்க்கள்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், ‘ மெர்சல் படம் குறித்து நான் சொன்ன கருத்துக்கு என்னை தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். இது தவறான ஒரு அணுகுமுறை.’
‘இதற்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். மெர்சல் குறித்து சரியான முறையிலேயே எனது எதிர்ப்பை பதிவுசெய்தேன். எனது முடிவில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை’ என்றார்.