தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று சற்றுமுன் விசாரணைக்கு வந்தது அதை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட வழக்குடன் இணைத்து, அந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவருகிறது. வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றபோது, தினகரன் தரப்பில் ’தகுதிநீக்கம் தொடர்பாக எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை. அதுதொடர்பான உத்தரவையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே, அதைத் தபால்மூலம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. கட்சி சாராமல் செயல்படவேண்டிய சபாநாயகர், முதலைமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்ததாலேயே, எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ததாக சபாநாயகர் தனபால் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று சற்றுமுன் விசாரணைக்கு வந்தது அதை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரனையை வருகிற நவம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.