நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் பலகட்ட பிரச்சனைகளுக்குப்பிறகு இன்று திறக்கப்பட்டாலும் இன்னும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.
சிவாஜி சிலையில் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டதற்கு விழா மேடையிலேயே நடிகர் பிரபு “ஒரு ஓரத்திலாவது கருணாநிதியின் பெயர் இருந்திருக்கலாம்” எனவும் அதை நிறுவ வேண்டுமென கோரிக்கையும் விடுத்திருந்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் “கருணாநிதியின் பெயரை நீக்குவதற்காகவே சிலை இடமாற்றம் செய்யப்பட்டதென” குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார்.
தற்போது எஸ்.வி.சேகர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் “புதிய சிலை செய்யாதபோது கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது அரசியல் அநாகரிகம்” என்றும் ,
“தமிழகத்தில் இன்னும் அரசியல் அநாகரிகம் இருப்பதை நிருபிப்பதற்கு மாபெரும் கலைஞன் சிவாஜி சிலை திறப்புவிழாவை பயன்படுத்தியது கேவலம்” என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிறிது நேரம் கழித்து மூன்றாவது டுவிட் மூலம் அதிமுக அமைச்சர்களுக்கு “அம்மாவின் ஆணைப்படி திறந்த உங்கள் பெயர் வரவேண்டுமென்றால் கலைஞரின் கல்வெட்டுப்போக மீதமுள்ள மூன்று பக்கங்களிலும் இஷ்டத்திற்கு எழுதிக்கொள்ளலாமே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அரசை மறைமுகமாக பாஜக இயக்கிக்கொண்டிருப்பதாக விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகவும் , ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறிய எஸ்.வி.சேகர் தற்போது கலைஞருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளது அரசியல் களத்தில் கவனிக்கவேண்டியதாகிறது.