திமுகவினர் தூர்வாரிய சேலம் கட்சராயன் ஏரியை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ந் தேதி பார்வையிட உள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நீர்நிலைகளை தூர் வாரி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியின் தொகுதியான எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரியையும் திமுகவினர் தூர் வாரினர். பின்னர்
அந்த ஏரியை கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி ஸ்டாலின் பார்வையிட சென்றார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி கோவை புறநகரில் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.
அப்போது அதிமுகவினர் மீண்டும் கட்சராயன் ஏரியை தூர் வாருவதாக இறங்கினர். ஆனால் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஏரியை பார்வையிட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஸ்டாலின் ஏரியை பார்வையிட செல்வது அரசுக்கு கவுரவ பிரச்சனையா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
அத்துடன் ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம் என்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வரும் 31-ந் தேதி கட்சராயன் ஏரியை ஸ்டாலின் பார்வையிட உள்ளார்.