மீனுக்கு எமனான இறால்! இராமநாதபுரம் மீனவர்கள் வேதனை

minkal

இராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை கிராமப் பகுதியில் நதிப் பாலத்திலிருந்து தேவிபட்டினம் வரையிலான கடற்கரை ஓரங்களில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதேபோல், கடந்த 9-ஆம் தேதி வைகை ஆற்றுநீர் கடலில் கலக்கும் முகத்துவாரமான ஆற்றங்கரை கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

இதுகுறித்து இராமநாதபுரம் கோட்டாட்சியர் பேபி, வட்டாட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மீண்டும் அதே ஆற்றங்கரை கடற்கரை ஓரத்தை ஒட்டியுள்ள நதிப்பாலம் முதல் தேவிபட்டினம் வரையிலான கடற்கரையோரங்கள் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் எம்.கருணாமூர்த்தி கூறியது:

“நீண்ட கடற்கரை ஓரங்களைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலே முக்கியமாக உள்ளது.

இந்த நிலையில், பல ஆயிரக்கணக்கான மீன்கள் அடிக்கடி கடலில் செத்து மிதப்பது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். இதற்கு முக்கிய காரணம், மாவட்ட கடற்கரை ஓரங்களில் அதிகளவில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளே. இதிலிருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகளே ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதற்குக் காரணம்.

கடந்த 9-ஆம் தேதி இதேபோல் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தபோது, அதிகாரிகள் ஆய்வு செய்தார்களே தவிர, இறால் பண்ணைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே நிலை நீடித்தால், இப்பகுதியில் வசிப்பவர்கள் பலருக்கும் தொற்றுநோய் பரவிவிடும்.

மீனவர்களையும், கடலில் வாழும் உயிரினங்களையும் காக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.

Leave a Response